தமது உறவுகள் தொடர்பான தகவல்களை கண்டறிந்து தருமாறு வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் 500 பேர் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் புனர்வாழ்வு சேவைகள் மையத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக வவுனியா தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வுக்காக அமைக்கப்பட்டுள்ள நடமாடும் புனர்வாழ்வு சேவைகள் மையம் தனது சேவையை நேற்று வவுனியா பகுதியில் மேற்கொண்டிருந்தது.

இந்த சேவை நிலையத்தை தொடர்புகொண்ட இடம்பெயர்ந்த மக்கள் கைது செய்யப்பட்ட, காணாமல்போன, கடத்தப்பட்ட தமது உறவுகளை கண்டறிந்து தகவல் தருமாறு முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

500 இற்கு மேற்பட்ட மக்கள் ஒரே நாளில் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். வன்னியில், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வரும்போது தனது மகன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஒரு தாய், தனது மகன் வெலிகந்தை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது மகனை கண்டறியும் முயற்சிக்கு அதிக பணம் தேவைப்படுவதாகவும், அரிசி விற்பனை செய்வதால் பெறப்படும் சிறிய அளவு பணத்தை கொண்டு தன்னால் அவரை தேடமுடியாது உள்ளதாக மற்றுமொரு தாய் தெரிவித்துள்ளார்.

எனது மகன் உயிருடன் உள்ளாரா அல்லது இல்லையா என்பதை தெரிவியுங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த மையத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டவர்களில் பெருமளவானவர்கள் மெனிக் பாஃம் முகாமை சேர்ந்தவர்கள். வவுனியா நகருக்கு சென்று முறைப்பாடுகளை மேற்கொள்வதில் சிரமம் உள்ளதால் முறைப்பாடுகளை மேற்கொள்ளும் இந்த நிலையம் முகாமினுள் அமைக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே சிறிலங்கா அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை பார்வையிடுவதற்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் மக்கள் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.