மன்னார் மருதமடு புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தம்மிடம் இரகசியமான முறையில் மறைத்து வைத்திருந்த 17 கையடக்க தொலைபேசிகள் உட்பட பல உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபாய மெதவல தெரிவித்துள்ளார்.

சில கையடக்க தொலைபேசிகளை அவர்கள் தமக்கு தேவையான நேரத்தில் பயன்படுத்திய பின்னர் புதைத்து வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய புலிகளின் சந்தேக நபர்கள் வெளிநாடுகளுக்கு அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் இவர்கள் தமது சர்வதேச வலையமைப்பினருக்கு தகவல்களை வழங்கியிருக்கலாம் எனவும் பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தொலைபேசிகளில் எடுக்கப்பட்ட அழைப்புகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கையடக்க தொலைபேசிகளுடன் 14 சிம் அட்டைகள், 30 பற்றரிகள் மற்றும் 21 சார்ஜர்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் மெதவல குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வு முகாமின் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன. அதேவேளை இது குறித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் துரிதமான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வு முகாம்களில் உள்ள புலிகளின் சந்தேக நபர்கள் கையடக்க தொலைபேசிகளை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக  புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் ஒரு தொலைபேசியில் உள்வரும் அழைப்புகளுடன் தொடர்பு கொள்வதற்காக மாத்திரம் கண்காணிப்புடன் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வருகிறது.

அதேவேளை தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு கையடக்கதொலைபேசிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் ரணசிங்க கூறியுள்ளார்.

மருதமடு முகாமில் கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றபட்டுள்ளமை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் இந்த முகாமில் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 500 பேருக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் சுதந்த ரணசிங்க மேலும் கூறியுள்ளார்.